Monday, April 30, 2012

ஒரு பூ எழுதிய மடல்







அன்புத்தோழி

நலம். நலமறிய ஆவல்.

உன் கடிதம் கிடைக்கப்பெற்றேன்.
இல்லை இல்லை.
உன் கடிதம் கிடைக்க உயிர் பெற்றேன்.

உன் கடிதத்திலும் எழுத்துக்கள் உன்னைப்போல,
கொஞ்சமாய் தலை குனிந்தே இருக்கின்றன.

பூக்களில் மடல்கள் பார்த்திருக்கிறேன்.
நீ எழுதிய மடலில்தான் எத்தனை பூக்கள்?

வார்த்தைகளை வருடிப் பார்க்கிறேன்.
வார்க்கப்பட்டதா? அல்லது வரையப்பட்டதா?

உன் விழிகளில் உள்ள உயிரோட்டத்தை
எப்படி இந்த காகிதத்தில் கொண்டு வந்தாய்?

உன் மடலை பருகுவது என் கண்கள்தான்.
ஆனால் என் நாசி தேன் சுவை உணர்கிறது.

உன் எச்சில் பட்ட கடிதத்தின் ஓரம்.
என் உதடுகள் உரசியும் காயவில்லை ஈரம்.

வாய் மூடி வாசித்தும்
என்னை சுற்றி எதிரோலிக்கிறன
உன் எழுத்துக்கள்.

வாசிக்கிறேன் வாசிக்கிறேன்.
எத்தனை முறை என பிறகு யோசிக்கிறேன்.

No comments:

Post a Comment